ஒரு செய்தியாளர் சிறந்த செய்தியாளராக திகழ வேண்டும் என்றால் அவரிடம் சில அடிப்படையான தகுதிகளும் பண்புகளும் கட்டாயமாக இருக்க வேண்டும். அவை என்னென்ன பண்புகள் என்பதை இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
மக்களிடம் செய்தியை கொண்டு செல்வது மக்களின் கருத்துக்களை ஆட்சியாளர்களுக்கு கொண்டு செல்வது என்கிற இந்த அற்புதப் பணியை செய்பவர்கள் ஊடகவியலாளர்கள் அதாவது 'செய்தியாளர்கள், 'பத்திரிகையாளர்கள்' ஆவார்கள்.
செய்தி மோப்பத் திறன் (Nose for News)
செய்தியாளர் செய்திகள் கிடைக்குமிடத்தை மோப்பம் பிடிக்கும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும். செய்தியைக் கண்டவுடன் அவர்களது மூக்கு வியர்க்க வேண்டும். அவர்களது செய்தி உள்ளுணர்வு எப்பொழுதும் விழித்திருக்க வேண்டும். நல்ல செய்தியாளர் எப்பொழுதும் செய்திக்குப் பசித்திருப்பவராகவும், செய்தியைக் கண்டு கொள்ள விழித்திருப்பவராகவும், செல்லும் முறையில் தனித்திருப்பவராகவும் விளங்க வேண்டும்.
நல்ல கல்வியறிவு:
செய்தியாளர் போதுமான அளவு கல்வியறிவு பெற்றிருக்க வேண்டும். எல்லாவற்றைப் பற்றியும் ஓரளவு அடிப்படை அறிவு பெற்றிருக்க வேண்டும். அவர்களுக்கு எல்லாத் துறைகளும் தெளிவாக இருந்தால்தான், அவற்றைப் பற்றிய செய்திகளை நுட்பமாகவும், ஆழ்த்தும், முழுமையாகவும் வழங்க முடியும்.
சரியாகத் தகுதல்:
செய்திகளைச் சரியாகவும் துல்லியமாகவும் (Accuracy) தருகின்ற பண்பு செய்தியாளருக்கு வேண்டும். எதனையும் ஊகமாக, சரிபார்க்காது எழுதுவது பல வேளைகளில் தொல்லையாகிவிடும். "எதனையும் முதலில் பெற வேண்டும்; அதனையும் சரியாகப் பெற வேண்டும்". என்பதுதான் செய்தியாளரின் குறிக்கோளாயிருக்க வேண்டும்.
விரைந்து செயல்படல்:
செய்தியாளர் வியக்கத்தக்க வகையில் விரைவாய்ச் (Speed) செயல்பட வேண்டும். செய்தித்தாளின் இறுதிப் பக்கம் தயாராகும்முன்பு, திறமையான செய்தியாளர் சேகரித்த செய்திகளை அனுப்புவார். "செய்தியைச் சரியாகப் பெற வேண்டும்; உடனேயும் பெற வேண்டும்", என்பதனை மறந்துவிடக்கூடாது.
நடுநிலை நோக்கு (Objectivity)
செய்தியாளர் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு ஆட்படக்கூடாது. நடுநிலை நின்று செய்திகளைச் சேகரித்து அனுப்ப வேண்டும். சொந்தக் கருத்துகளைச் செய்திகளோடு சேர்த்துக் கூறக்கூடாது. செய்தியின் முக்கியத்தை மாற்றவோ கோணத்தை வேறுபடுத்தவோ, வண்ணம் பூசவோ முயலக்கூடாது.
செய்தி திரட்டும் திறன் :
செய்தியை இனங்கண்டு செய்தி கிடைக்கும் இடத்தை அடைந்த பின் உண்மையான விவரங்களைத் திரட்ட வேண்டும். சேகரித்தவற்றுள் முக்கியமானவற்றைத் தெரிந்து. முறைப்படுத்திச் செய்தியாக வடிவமைத்துத் தரும் ஆற்றல் செய்தியாளர்களுக்கு வேண்டும். இந்தத் திறனைப் பயிற்சியின் மூலமாகவும் பட்டறிவின் வாயிலாகவும் தான் பெற இயலும்.
பொறுமையும் முயற்சியும் :
செய்தியாளருக்கு மிகுந்த பொறுமைக்குணம் வேண்டும். பதற்றப்படவோ, அவசரப்படவோ கூடாது. 'பதறிய காரியம் சிதறும்' என்பது பழமொழி. செய்தியை அறிந்தவர்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களிடம் உண்மையை வரவழைத்துச் செய்தியாக எழுதி அலுவலகத்திற்கு அனுப்புகின்ற வரை பல்வேறு இடர்ப்பாடுகளைச் சந்திக்க நேரிடலாம். இருப்பினும் மனத்தளர்ச்சியின்றி, 'முயற்சி திருவினை யாக்கும்' என்ற தெளிவோடு செயல்படுகின்ற செய்தியாளர்களால் தான் செயற்கரியன செய்ய முடியும்.
செய்தியாளர் செய்திகளைத் திரட்டுவதிலும் தமக்கென்றொரு தனிமுறையை (Originality) உருவாக்கிக் கொள்ள வேண்டும். மற்றவர்களை அப்படியே பின்பற்றினால் தனித்தன்மையை உருவாக்க முடியாது. சிறந்த செய்தியாளர்கள் செய்திகளைத் திரட்டித் தருவதில் தனி முத்திரை இருக்கும்.
நல்ல தொடர்புகள்:
செய்தியாளர் பல வகையான மனிதர்களோடும் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும், பலதரப்பட்ட, பல நிலையிலுள்ள மக்களோடு அன்பான தொடர்பு இருந்தால், செய்திகளைப் பெறுவதற்கு உதவியாக இருக்கும். மக்கள்தான் செய்திகளின் மூலங்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. செய்திகளைத் தருகின்றவர்கள் தங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைச் செய்தியாளர்கள் கட்டிக்காக்க வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் செய்தி வழங்கியவரைக் காட்டிக்கொடுக்கக் கூடாது. செய்தி தருகின்றவருக்குக் கொடுக்கும் வாக்குறுதியை எப்படியும் நிறைவேற்ற வேண்டும்
நேர்மை:
செய்தியாளர் மிகவும் நேர்மையாக (Honesty) நடந்து கொள்ள வேண்டும். செய்திகள் இல்லாத இடத்தில் பொய்மையாகச் செய்தியை உருவாக்குவதோ, கிடைத்த செய்தியை வேண்டுமென்றே வெளியிடாமல் புதைத்துவிடுவதோ இதழியல் அறமாகாது. செய்தியாளர்கள் கையூட்டைக் கருதியோ, வேறு நன்மைகளையும் சலுகைகளையும் எதிர்பார்த்தோ செய்திகளை மாற்றவோ, திருத்தவோ, பொய்யைப் பரப்பவோ கூடாது. சிலர் புகழ் பெறுவதற்காகச் செய்தியாளரைப் பயன்படுத்திக் கொள்ள முயல்வார்கள். அன்பளிப்புகள், விருந்துகள் வழங்கிச் செய்தியாளர்களைச் சிலர் விலை கொடுத்து வாங்க நினைப்பார்கள். செய்தியாளர்கள் சோதனைகளுக்கு ஆட்படாமல், சாதனைகளைச் செய்வதிலேயே குறியாக இருக்க வேண்டும்.
செயல்திறன்:
செய்தியாளர் நுட்பமாகவும் திறமையாகவும் தந்திரமாகவும் (Tact) செயல்பட வேண்டும். சூழ்நிலைக்கேற்பச் செயல்படும் முறையை மாற்றிக்கொண்டு பணிபுரிய வேண்டும். புதிய இடங்களுக்குச் செல்லும்பொழுதும், புதிய மனிதர்களைப் பார்த்துப் பழகும் பொழுதும் அதற்கேற்றாற்போலத் தன்னை மாற்றிக்கொண்டும், புதியனவற்றை ஏற்றுக் கொண்டும் (Adaptability) செயல்படுதல் தேவையாகும்.
தன்னம்பிக்கை:
செய்தியாளர் தளராத தன்னம்பிக்கையோடு (Self Confidence ) பணி செய்ய வேண்டும். 'என்னால் முடியும்', 'செயற்கரியன செய்வேன்'. என்ற தன்னம்பிக்கை இருந்தால் பலவற்றை எளிதாகச் செய்ய முடியும். செய்தியாளர் இனிய ஆளுமையை (Personality) வளர்த்துக் கொள்ள வேண்டும். காண்பவர்களைக் கவரும் வகையில் பொலிவான தோற்றமும், இனிமையாகப் பழகும் பண்பும் கொண்ட செய்தியாளர்களால் பலவற்றை எளிதாகச் செய்ய முடியும்.
தெளிவாகக் கூறும் ஆற்றல்
செய்தியாளர் எதனையும் தெளிவாக எடுத்துரைக்கும் (Clarity of Expression) ஆற்றல் பெற்றிருக்க வேண்டும். பேசுவதிலும் எழுதுவதிலும் தெனிவு இருக்க வேண்டும் தேர்கண்டு செய்திகளைச் சேகரிக்கின்ற பொழுது தெளிவாக விவரங்களைக் கேட்டறிய வேண்டும். செய்திகளை எழுதுகின்ற பொழுதும் தெளிவு தேவை. சமுதாய, சமயச் செய்திகளைத் திரட்டித் தரும்பொழுது மரபுகளை அறிந்திருக்க வேண்டும், மரபுகளுக்கு முரண்படும் வகையில் செய்திகளைக்கொடுக்க நேரிட்டால் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். கவனமாகவும்
சட்டத் தெளிவு:
எப்படிப்பட்ட செய்திகளை வெளியிட்டால் சட்டப்படி குற்றமாகிவிடும் என்பதைச் செய்தியாளர் அறிந்திருக்க வேண்டும். சட்டத்தெளிவின்றி எதையும் செய்தியாக்கினால் அவரும் இடர்ப்பாட்டுக்குள்ளாகி, செய்தித்தாளுக்கும் தொல்லைகளை ஏற்படுத்துவார். சட்டமன்ற, நாடாளுமன்றச் செய்திகளை வெளியிடும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
